தீபாவளி
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவ முள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மான மில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு ஏற்பத் தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ்மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று அவற்றுக்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள். அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக , பண்டிகை , விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீயநாளாக , அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.
இஸ்லாம், கிருஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்கு தலைகீழான மாறுதல் எற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு அளவு ஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித்திளைத்து வருகிறார்கள்!
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகமும், துரோகம், மோசத்தாலும், வாழவேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதைக் காதில் வாங்கக்கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்!
இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உட்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும்புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உட்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கு அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்துகொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமுமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்காட்டாகக் கூற முடியும்?
நம் பள்ளிகளும் கல்லுாரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக் கூட அறிவைக் கொடுக்கவில்லையென்றால், இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர, வேறு என்னவென்று சொல்லமுடியும்? இதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில் தான் மானமும் அறிவும் விளையமுடியும்?
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக்
கொண்டுபோய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
3. விரித்த உலகம்(பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
4. ஆசைக்கு இணங்கி பன்றி(விஷ்ணு) பூமியுடன் கலவிசெய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற
பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய் வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத
வேண்டியிருக்கிறது?
ஙீ பூமி தட்டையா? உருண்டையா?
ஙீ தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
ஙீ எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?
ஙீ சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?
ஙீ எங்கிருந்து தூக்குவது ?
ஙீ கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?
ஙீ விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம்என்ன?
ஙீ அரக்கனைக் கொன்று பூமையை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
ஙீ பூமி மனித உருவா? மிருக உருவமா?
ஙீ மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளைஉண்டாகுமா?
ஙீ பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
ஙீ இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.
இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் அசாம் மாகாணத் துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்து வதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?
மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லா விட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக் கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறிகளையும், அயோக்கியர் களையும் மெனக்கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக்கொண்டும் போகக்கூடிய அளவு மேற்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ , சூதாடா வோ கையில் பணமும் கொடுத்து இவ்வளவு போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச்சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவும் அறிவு இருக்கிறதா? என்று கேட்கின்றேன்.
புரட்டாசி சனிக்கிழமை வந்தால் தங்களுக்குப் பட்டை நாமம் போட்டுக்கொண்டும் , செம்புக்கும் நாமத்தைப் போட்டுக்கொண்டும் துளசி, அரளிப் பூவையும் அந்தச் செம்புக்கு சுத்திக் கொண்டும் 'வெங்கிடாஜலபதி கோவிந்தா' என்றும் , 'நாராயணா கோவிந்தா' என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக்கொண்டு போவதில் ஏதாவது பலன் உண்டா என்றுதான் கேட்கிறேன்.
மற்றும், திருப்பதிக்குப் போகின்றேன் என்றுசொல்லிக்கொண்டு தலை மயிரும், தாடிமயிரும் வளர்த்து, வெறும் மஞ்சள் நனைத்த துணி கட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக்கொள்வதும், பெண்பிள்ளைகள் சுற்றத்தாரை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் உண்டியில் போட்டுப் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ அல்லது வேறு வரும்படி யிலோ இலாபத்தில் பங்கு என்று கணக்கு வைத்து எடுத்துச் சேர்த்துக் கொள்வதும் ஆன பணமூட்டையைக் கட்டிக்கொண்டு, கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக் குறைக்குத் தெருவில் கூட்டமாய், 'கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை இரயிலுக்குக் கொடுத்துத் திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலை ஏறுவதும் ஆண்களும், பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதும், அந்த மலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும், அங்கு பட்டை நாமம் போட்டுக்கொள்வதும் கொண்டுபோன பணத்தை உண்டியலில் காணிக்கையாகக் கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக்கடி யில் இடிபடுவதும் பிடிபடுவதும், வெந்ததும் வேகாததுமான சோற்றைத் தின்பதும், மற்றும் பல சோம்பேறிகளுக்கும், மேக வியாதிக்காரர்களுக்கும், வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டைகளிலும் வேர்களிலும் செய்த மாமணி மாலை களையும் வாங்கிக் கழுத்தில் போட்டுக்கொள்வதும், மலைக் காய்ச்சலோடு மலையில் இருந்து இறங்கி வருவதும், வீட்டுக்கு வந்து "மகேஸ்வர பூஜை" நடத்துவதும், பிராமண சமாராதனை செய்வதும் தவிர , மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்க்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்டதாக அதாவது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரிக் குணங்களை விடும்படி செய்ததாகவாது நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம்மாதிரியான அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருடத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகிறது என்பதை எந்தப்பொருளாதார இந்தியத் தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா? என்றுதான் கேட்கிறேன்.
கார்த்திகைத் தீபம்
கார்த்திகைத் தீபப்பண்டிகை ஒரு தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கார்த்திகை நட்சத்திரத் தினத்தை "சுப்பிரமணியன்" என்னும் சாமிக்கு உகந்த நாளாகக் கருதி, பக்தர்கள் என்பவர்கள் பூசைகளும், விரதங்களும் மேற்கொள்கின்றார்கள். இதில் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் படுகின்றது. இந்தச் சமயத்தில் சுப்பிரமணியனின் 6 வகையான ஊர்கள் என்று புராணம் கூறும் ஊர்களுக்கு மக்கள் பிரயாணம் செய்து, ரொக்கப்பணத்தைச் செலவு செய்வதோடு, காடு, மேடு, குப்பை கூளங் களில் எண்ணற்ற விளக்குகளை வைப்பதன் மூலம் ஆகும் எண்ணெய், நெய் செலவு, சொக்கப்பானை கட்டி நெருப்பு வைப்பதற்கு ஆகும் செலவு போன்றவற்றுடன், இதனால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்கவழக்கங்களும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!
இந்த மூடப்பண்டிகைக்கு 2 கதைகள் உள்ளன. முதலாவது, ஒரு சமயம் அக்னிதேவன் என்னும் கடவுள் சப்த ரிஷிகளின் மனைவி மார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதனை அறிந்து அவனது மனைவி சுவாகாதேவி என்பவள், அவர்களுடன் தன் கணவன் மோகங் கொண்டதால், சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து, அதனால் தானே வசிஷ்டரின் மனைவி அருந்ததியை விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவி மார்களைப் போல் உருவம் கொண்டு, தன் கணவன் ஆவலை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள் தாம் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படு பவையாம். இந்த நட்சத்திரப் பெண்கள் தான் சுப்பிரமணியன் என்ற கடவுள் குழந்தையாக இருந்த போது அதை எடுத்து வளர்த்தார்களாம்!
அடுத்து, இதன் மூலம் அறிவது, பிறர் மனைவிமேல் ஆசைப்படுவது, விபச்சாரம் செய்வது குற்றம் இல்லை. தன் கணவன் எந்தக் காரியத்தை விரும்பினாலும் அதைப் பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைகளாக மனைவி இருக்க வேண்டும் என்பது.
இவ்வாறு நம் மக்களுக்கு கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள் அடுத்த கதை.
ஒரு சமயம் பிரம்மா , விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழுமுதற்கடவுள் தாம், தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கம் வாய்ச்சண்டை ஏற்பட்டு பிறகு அடி பிடிச்சண்டை ஆகிவிட்டதாம் . இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க உடனே பரமசிவன் தோன்றி பிஇந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர் தான் பெரியவர்' என்றானாம்.
உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.
பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணாமல் மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு பிதாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், பிதாழம்பூவே எங்கிருந்து எவ்வளவு காலமாய் வருகின்றாய்பி என்று கேட்கவும் பிநான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டு இருக்கிறேன்பி என்றதாம். உடனே பிரம்மன். பிநான் சிவன் முடியைப் பார்த்து விட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சினானாம் . அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக்கண்ட சிவன்கோபங்கொண்டு பிபொய்சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது' என்றும் சாபமிட்டாராம்.
உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி திருந்தி சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து , மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தங்கள் வழக்கை தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக புஇம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்பூ என்று கேட்க அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னானாம் . இது தான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப்பண்டிகையாகும்.
இவ்வாறு முரண்பட்ட வேடிக்கையான இந்த இரண்டு கார்த்திகைப் பண்டிகைகளால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதைத் தவிர, வேறு சந்தேகம் உண்டா? மேலும் நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண்காலப் போக்கும் கொண்டவர்களுக்கு எடுத்துக்கூறத் தொடங்குபவர்களுக்கு உடனே பகுத்தறிவு அற்ற வைதீக மூடர்கள், தேசத்துரோகி , மதத் துரோகி வகுப்புவாதி, நாத்திகள் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றார்கள் . சிறிதாவது பொறுமைகொண்டு , நாம் சொல்லும் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்ப்பவர்கள் இல்லை.
தந்தை பெரியார்