விநாயகர் சதுர்த்தி
விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும் , வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப்போனால் அது ஏனைய 'கடவுள்' களுக்கு மிகவும் வெட்கக்கேடாகும்.
அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர் களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புபற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து 'இது உண்மையில் கடவுள்' என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை.
சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி செய்தாள் என்பது தான் கடவுள் தன்மையை விளக்கும் அதிசயம்.
முதலாவதாக, பெண்கள் குளிக்கும்போது அங்கு அந்த அறைக்கு ஆண்கள் போவது சர்வ சாதாரணமாக இருந்திருக்க வேண்டும். இல்லை யென்றால், யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கத் தேவையில்லை; காவல் செய்யவும் ஆள் தேவையில்லை. அடுத்தபடியாக, ஆண்கள் யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால் விநாயகர் என்று செய்யப்பட்ட அந்த உருவம் ஆண் உருவம் தானே! ஆண்கள் வந்துவிடக் கூடா தென்ற நினைப்பினால் ஒரு ஆணையே உற்பத்தி செய்து சதா நேரமும் பார்த்துக்கொண்டு இருக்கச் செய்வது எவ்வளவு புத்திசாலித்தனம்?
குளிப்பதற்காகச் சென்ற பார்வதி தன் உடம்பின் மேல் உள்ள அழுக்கை உருட்டி ஒரு உருண்டை பிடித்து, அதை வாசற்படியில் வைத்து உயிர்கொடுத்தாள் என்று கூறப்படுகிறது.
இதுதான் விநாயகர்!
ஒரு மனிதனுடைய எடைக்கு ஏற்றவாறு அத்தனை பெரிய அழுக்கு பார்வதியின் மேல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியுமா? எனவே, சுத்த ஆபாசமும் அசுத்தமும் நிறைந்த வளாகவே நாம் அவளைக் கருதவேண்டியுள்ளது.
அடுத்தப்படியாக , அவள் குளிக்கும்போது அங்கே வருகின்றான் சிவன். சிவனைக் கண்டதும் உமா கேட்கின்றாள், "இங்கே எப்படி வந்தீர்? நான் குளிக்கும் போது நீர் வரலாமா? ஒரு ஆளை நடையில் காவல் வைத்து இருந்தேனே, அவனை எப்படி தட்டிக் கழித்துக்கொண்டு வந்தீர்கள்?" என்றதும், அதற்குப் பரம சிவன் கூறுகின்றார், நான் வரும்போது நடையிலே ஒருவன் நின்று கொண்டு வழி மறித்தான்; நான் இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவன் விடமாட்டேன் என்றான்; யாராய் இருந்தாலும் சரி, கணவனாய் இருந்தாலும் விட மாட்டேன் என்றான்! என்னைவிடாமல் தடுத்தான். எனவே நான் என் கை வாளால் அவன் தலையைச் சீவினேன். பிறகு தடையின்றி உன்னைக் காண வந்தேன் என்றான்.
ஙீ இதிலே குளிக்கும் பெண் தன் மனைவியாய் இருந்தாலும்கூட
அவனுக்கு அங்கே என்ன வேலை?
ஙீ இரண்டாவது அதற்காக ஒரு மனிதனையே கொலை செய்து
விட்டுப் போகவேண்டிய அவ்வளவு பெரிய சங்கதி அங்கே என்ன நடந்துவிட்டது?
ஙீ மூன்றாவது அவள் கணவனே என்று தெரிந்த பின்னும்
பரமனை அவன் தடுத்தது எவ்வளவு முட்டாள்தனம்?
இவற்றை எல்லாம் யோசனை செய்தால் இது ஒரு அண்டப்புளுகு என்பதும், முட்டாள்தனமான நடவடிக்கை என்பதும் விளங்கும்.
இதனை அறிந்த பார்வதி, துடிதுடித்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கின்றாள். தலைதுண்டாக்கப்பட்டு உள்ளது. ஆனால் துண்டாக்கப்பட்ட தலையை அங்கே காணோம். உடனே பரமனை நோக்கி, "நாதா என் அருமைச் செல்வம்-என் குழந்தை போன்று நான் உற்பத்தி செய்த அந்த அருள் செல்வத்தை எனக்குத் தாங்கள் தந்தாக வேண்டும். இல்லையேல் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது!" என்று கூறினாள்.
பிறகு இதைக்கேட்ட பரமன் என்ன செய்வதென்று யோசித்து, கடைசியாக ஒரு யானையின் தலையைக் கொய்து அந்த முண்டத்தின் மேல் வைக்கின்றான். உடனே அந்த முண்டம் யானைத்தலை கொண்ட விநாயகர் ஆகிறது. இது ஒருகதை.
மற்றொன்று பரமனும்,பார்வதியும் ஒரு நாள் வனத்திற்குச் சென்றபோது, ஒரு ஆண்யானையும், பெண்யானையும் கலவிசெய்து கொண்டு இருந்ததைப் பார்வையிட்டனர். அதை ஆசையால் பரமனும் பார்வதியும் யானை வடிவில் உருமாறிக் கலவிசெய்து பெற்றது தான் விநாயகர்.
மூன்றாவது,
ஒரு நாள் பார்வதியும் பரமனும் போய்க்கொண்டு இருக்கையில், ஒரு யானையின் உருவம் (பொம்மை) ஒன்றைக் கண்டார்களாம். ஆகவே, அதன் மேல் மோகம் கொண்ட பார்வதியும் அதுபோல் பிள்ளை பிறக்கவேண்டும் என்ற நினைத்தாளாம் . ஆகவே, அப்படிப் பிறந்தது தான் விநாயகர் என்றும் கூறுகிறார்கள். ஆகவே இந்த மூன்று கதைகளையும் தெரிந்த மக்களே இந்தப்படி மண்டையை உடைப்பார்கள் என்றால் , இவர்களின் புத்திகெட்டத் தன்மையை, முட்டாள்தனத்தைப் பொறுத்துக்கொண்டு இருக்க முடியுமா? இந்தப்படி ஆபாசமான கதையை எழுதி நம்மை நம்பும்படிச் செய்துவிட்டனர் பார்ப்பனர். ஆகவே, இது சிவனும் சுப்பிரமணியனும் வந்த காலத்திலே வந்தது, வடநாட்டான் இங்கு கொண்டுவந்து விளம்பரம் செய்துவிட்டான். அது இப்போது பெரிய கடவுளாக மதிக்கப்பட்டு எல்லாக் காரியங்களுக்கும் முன்னே வைக்கும் இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனதால் தான் பிள்ளையார் சதுர்த்தி-விநாயகர் சதுர்த்தி என்று ஆடம்பரமான நாளைக் கொண்டாடுகிறார்கள்.
எனவே, இதை எல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்தால், பகுத்தறிவைப் பயன்படுத்திப் புகுந்து பார்த்தால் மனிதனுக்கு இதன் உண்மை புலனாகும். ஆனால் நாம் அப்படிச் செய்வது இல்லை. இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
சரஸ்வதி பூசை (ஆயுத பூசை)
சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத "மக்குகள்" என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.
முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு , அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவ மெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும் சிவன் வேட உருவ மெடுத்து அவளைப்பின் தொடர்ந்து ஓடவும் , சிவன் வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.
இரண்டாவது,
ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின் போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க , அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி , மகன் வயிற்றுப் பேத்தியாகிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம். அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதார மானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதிபூசை ஆயுத பூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.
இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும் , தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி , உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங் களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத் திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார் கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும் படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதா விட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.
சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக்கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள் . அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பைகளையும் அள்ளி அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூசை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின் றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100- க்கு 5 பேர்கள் என்று தான் உள்ளார்கள்.
இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப் பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000 த்துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க்கற்பனையா? என்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.
இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம்.அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதி யாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டும் நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக் காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளி களாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர் களைப் பார்த்து "முட்டாள்கள், அறிவிலிகள் , காட்டுமிராண்டிகள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரி கள் அரசாட்சியுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப்பாருங்கள். இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்!
இராசாக்கள் கொலு இருப்பது , பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம்
செலவு செய்வது, அறிவுச் செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர் களுக்குத் தட்சணை, சமாராதனை , ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவாகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால் , மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்ல.
தந்தை பெரியார்
No comments:
Post a Comment