Monday, April 6, 2009

கடவுள் பெயர்ச்சொல் தான்; வினை சொல் அல்ல.


கடவுளை பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் 5000 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் இதில் ஒரு 1000 அல்லது 500 ஆண்டுகள் வித்தியாசமாய்க் காணலாம். எப்படி ஆனாலும் அந்த 3000 ஆண்டுக்கு மேற்பட்ட காலம் பொதுவாக மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம் என்பதை நீங்கள் மறுக்கமுடியாது.

அந்தக்காலத்தில் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட ,நடந்துகொண்டு வந்த,பயன்படுத்திக்கொண்டு வந்த,எண்ணிக்கொண்டு-நம்பிக்கொண்டு வந்தைவைகளில் இன்று மனிதன் உணவு-உறக்கம் என்பதைதவிர வேறு எதை பின்பற்றி வருகிறான்: பயன்படுத்தி அனுபவித்துக்கொண்டு வருகிறான் என்று சிந்திப்போமேயானால் ,அவையெல்லாம் மாற்றப்படவேண்டிய,கைவிடபடவேண்டிய,மறுக்கப்படவேண்டிய காரியங்களாகவே இருந்து வருகிறது. ஆகையால்,கடவுள் என்பது ஒரு பொருள் அல்லது ஒரு சாதி என்று சொல்லப்பட்டாலும் ,அது பெயர்சொல்லே தவிர வினை சொல் அல்ல.பெயர்ச்சொல் ஆன பொருளுக்கு-வஸ்துவுக்கு-வஸ்து நிச்சயத்திற்கு கண்டிப்பாக செய்முறை -கூட்டு பொருள் தன்மை "பார்முலா" இருந்தே ஆகவேண்டும்:அது இல்லாதது வஸ்துவே ஆகமாட்டாது. ஆதலால் ,கடவுளைப்பற்றி பேசுபவர்கள் முட்டாள்களானால் அவர்களிடம் இந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டியவனாகதானே இருக்க முடியும்?

இங்கனமிருக்க , " கடவுள் என்றால் விளக்கங் கேட்க வேண்டாம்"
"கடவுள் என்றால் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்."
"அது உனக்கு புரியக் கூடியதல்ல."
"அதை எவனாலும் அறிந்து கொள்ள முடியாது."
"அது மனோ வாக்கு காயங்களுக்கு எட்டாத பொருள்"
"கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக் கொள்ள வேண்டியது தான் கடவுள் என்பதற்கு விளக்கம்"
- என்று சொல்லப்படுவதனால் இந்த முறை படி கடவுளை நம்புகிறவன் அவன் எவ்வளவு அறிவு மேதாவி ஆனாலும் அவன் மனிதக் கூட்டில் சேர்க்கப் படவேண்டியவனா?

"சர்வ சக்தி உள்ள ஒரு பொருள் என்பது பகுத்தறிவுள்ள ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாததாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன?" என்பதைப்பற்றி மனிதன் சிந்திக்க வேண்டாமா?

- தந்தை பெரியார்.

No comments:

Post a Comment