Friday, April 17, 2009

சிவபெருமானின் சிருங்கார லீலை

சிவபெருமான்தான் கடவுள்களின் தலைவன், இவன் யாருக்கும் பிறந்தவனல்ல. தானாகவே தோன்றியவன் (சுயம்பு).

ரிஷிமூலம், நதிமூலம் போல், இவன் பிறப்பு மூலத்தையும் ஆராயக்கூடாது. பிரம்மனையும், விஷ்ணுவையும் இவன்தான் தோற்று வித்தவன். இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்!

"நமசிவாய"என்னும் அய்ந்தெழுத்தை(பஞ்ச அட்சரம்) பிரமனுக்குப் போதித்தவனும் சிவன்தான்.

ஒரு காலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர்களிடம் என்ன - ஏது? என்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின் தலைக் கனம் புலப்பட்டது. ரிஷிகளின் கனத்தைவிட , ரிஷி பத்தினிகளின் கனமும் - ( தலைக்கனந்தான்) சிவனின் கவனத்திற்கு வந்தது.

கனத்தை இறக்கி, அந்த 'அற்ப'ஆத்மாக்களுக்கு நல்ல குணத்தை ஏற்படுத்துவதாக வாக்களித்தான் சிவன். தேவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

விஷ்ணுவை அழைத்தான் சிவன் "மோகினி உருவெடுத்து, தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார்" எனத் தனக்குக் கட்டளை பிறந்ததும், தளுக்குக் குலுக்குடன் விஷ்ணு தத்தித் தாவினான் தாருகாவனத்திற்கு.

மோகினியாய் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு ருசிகளை வழங்கி கலங்கிக் கிடந்த வேளையில்.

ரிஷி பத்தினிகளின் படுக்கை அறைப் பசி, பட்டினிகளுக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்துவந்தான் சிவன்.

அதுவும் சிவனாக அல்ல; பைரவர் வேடத்தில்.

தங்கள் தங்கள் மனைவிமார்கள் எங்கெங்கே, என்னென்ன செய் கிறார்கள் என்பதை அறிய, தங்கள் 'ஞானதிருஷ்டி' யக் கூட முடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கித் திளைத்தனர் ரிஷிகள்.

ரிஷி பத்தினிகளின் கதையும் இதேதான்.

வந்தது யார் என அடையாளம் நோக்காமல், அணைத்து மகிழ்ந்து ஆசை தணிந்தபின் "போச்சே கற்புப் போச்சே" என்று கூவினர்.

பதிவிரதத்தில் பங்கமும், பழுதும் பற்றி விட்டதைப் பாருக்குணர்த்த, கூச்சலே உபாயம் எனக் கருதினர் போலும்.

பார்த்தான் சிவன்; பருவச்சுவையினைப் பருகி உருகிய பத்தினிகள் பதறிப் புலம்புவதையும், கதறிக் குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்தச் சிவனுக்கு.

ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும் 'சிவனே' ன்று சிலர் குந்தினர். "சிவ- சிவ"என்று சிலர் பொங்கினர்.

பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமும் இறுதியில் சிவன் சொன்னான்.

"ரிஷிகளே ! 'அபிசார' வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்" என ஓடிவிட்டான். அபிசார வேள்வி என்பது -ஒரு பிராயச்சித்தக் காரியமாம்.

ரிஷிகள் வேள்வி செய்தனர். என்னதான் செய்தாலும் கோபம் கொழுந்து விடாமல் இல்லை.

உடுக்கை, அக்னி, மழு, சூலம் இவற்றை அவர்கள் ஏவ, அதனைக் கையால் பிடித்தான் சிவன், காலங்காலமாய்ச் சுமக்கிறான்.

சர்வ சாதாரண "வழக்குச்சொல்" சிலவற்றிற்கே "சிவ சிவ" என்று காதை கைகளை விட்டுக் கவ்விடும் சிவனடித் திருக்கூட்டங்களே சில சந்தேகங்கள்:

1) முன்னைப் பழமைக்கும் பழைமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் வர்ணிக்கப்படும் சிவன், தானாய்த் தோன்றியது எப்படி? அப்படியே இருந்தாலும், சக்தியை அவன்தான் ஆக்கினான் என்றாகிறது. இது உண்மையென்றால் மக்களைப் புணர்ந்தவன்தான் மகேசனா?

2) சக்தியின் முகத்திலும், தோளிலும் பிரமனும் விஷ்ணுவும் பிறந்த கூத்து பிரமாத வித்தைதான்! அப்படியானால், பார்வதி அம்மாளுக்குப் பரிபக்குவமான பாதைகள் எத்தனை?

3) தனக்கு வாழ்த்துச் சொல்லுகின்ற நமசிவாய என்ற பஞ்சாட் சரத்தை தானே போதிப்பதென்பது தற்புகழ்ச்சித் தன்மையல்லவா? எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு அடுக்குமா இந்தக் குணம்?

4) சிலர் தலைக்கனம் பிடித்துத் திரிந்தலைந்ததற்குக் கற்பழிப்பது என்ன முறை?

5) அம்மி மிதித்து, அருந்ததி பார்த்துக் கட்டுக்குலையா பத்தினிகள் கிடைத்தும், திடீர் வரவு மோகினியிடம் திருட்டுச் சுவை காண்பவன் தான் ரிஷியா?

6) கற்பழித்த பாவம். வேள்வி செய்தால் கேள்வியின்றிப் போகுமா? பிராயச்சித்தம் இப்படித்தான் என்றால், சிவனடியார்களும் இப்படிச் செய்யத் தயாராய் இருப்பவர்களைக் கண்டும் காணாதுவிடத் தயார்தானோ?

(ஆதாரம் : அபிமான சிந்தாமணி பக்கம் 659)

2 comments:

  1. தோழர் அந்த எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியவில்லை வெள்ளையாக மாறிவிட்டது!
    (மொபைல் வழியாக பார்க்கும் பொழுது) Font Colour மாத்துங்க!

    ReplyDelete
  2. Web Version
    Click செய்து பார்த்தால் அப்போது தெரிகிறது!

    ReplyDelete